×

திருநள்ளாறில் நாளை மறுதினம் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு அனுமதி: கொரோனா விதிமுறையை பின்பற்ற அறிவுரை

சென்னை: திருநள்ளாறில் நாளை மறுதினம் (27ம் தேதி) சனிப்பெயர்ச்சி விழா தொடங்கி பிப்ரவரி 12ம்தேதி வரை (48 நாட்கள்) நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சிக்கு முந்தைய வாரமும், பிந்தைய 4 வாரங்களும் (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) ஆன்லைன் மூலம் தேவஸ்தான இணைய தளத்தில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ விதிமுறைகள் அமலில் இருப்பதால், சனிப்பெயர்ச்சி விழாவின் போது, கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என தர்பாரண்யேஸ்வரர் கோயிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி.எஸ்.நாதன் (எ)அமுர்தீஸ்வர நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், சனீஸ்வர பகவான் கோயில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா தாக்கல் செய்த பதில் மனுவில், சனிப்பெயர்ச்சி தினமான 27ம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளோம், எனவே மதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த 48 நாட்களில் தரிசனத்துக்காக 60,000 மின்னணு அனுமதி சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு எத்தனை பேரை அனுமதிப்பார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி அனிதா சுமந்த், கொரோனா தடுப்பு நடைமுறைகளை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என அனுமதித்து வழக்கை முடித்து வைத்தார்.
    
* 48 மணி நேரத்துக்கு முன் கொரோனா டெஸ்ட் சான்று  
பாதுகாப்புடன் சனிப்பெயர்ச்சி விழா நடத்துவது தொடர்பாக காரைக்காலில் கவர்னர் கிரண்பேடி, இந்து சமய நிறுவனங்கள் செயலர் சுந்தரேசன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன்சர்மா, கோயில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், ஸ்தானிகர் சங்க தலைவர் அமுர்தீஸ்வரநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் கோயிலுக்குள் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்துக்கு முன்பாக தனக்கு கொரோனா இல்லை என்பதற்காக பிசிஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. 


Tags : Thirunallar: Advice , Admission to Coronation Rule: Admission to Coronation Rule at Thirunallar
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...