திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: பெரும்பான்மை மக்களையும், சிறுபான்மை மக்களையும் மோதவிட்டு, மத கலவரங்களை பாஜ தூண்டி வருகிறது. அதற்கு, தமிழகத்தில் ஆளும் அதிமுக துணை போகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்திருக்கிறார். அதிமுக, பாஜ எதிர்ப்பில் மக்கள் உறுதியாக உள்ளனர். 2 ஆண்டுக்கு முன்பு நடந்த எம்பி தேர்தலைவிட தற்போது அதிருப்தி அதிகரித்திருக்கிறது. நடிகர்கள் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அதிமுக, பாஜ கூட்டணியை யாராலும் பாதுகாக்க முடியாது. மதசார்பற்ற திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் எங்களுடைய இலக்கு. ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக இருக்கிறார் என்றார்.