பெங்களூரு: கர்நாடக மாநிலத்திலுள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் முற்றிலும் மாற்றி அமைக்கப்படும் என அமைச்சர் சுதாகர் கூறினார். பெங்களூரு விதான சவுதாவில் ஆரம்ப சுகாதார மையங்களில் ஏற்படுத்தப்படும் புதிய வசதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் ஆரம்ப சுகாதார மையங்களில் என்னென்ன வசதிகள் மற்றும் தொழில் நுட்பம் ஏற்படுத்தப்படும் என்ற விபரங்களை முதல்வர் எடியூரப்பாவுக்கு விளக்கினார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் சுதாகர் கூறியதாவது:
மாநிலத்திலுள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த சிறப்பு திட்டம் வகுத்துள்ளோம் . இதன்படி வாரத்தின் 7 நாளும் ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்படும். ஒவ்வொரு சுகாதார மையத்திலும் பெண் டாக்டர் மற்றும் ஆயுஷ் டாக்டர்களும் பணியில் இருப்பர். அத்துடன் சுகாதார மையங்களில் 6 முதல் 20 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். இதில் பாதிக்கு பாதி படுக்கை வசதிகள் ஆண் மற்றும் பெண் நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும்.
எக்ஸ்ரே, கதிரியக்க சிகிச்சை பிரிவு, சிறிய அறுவை சிகிச்சை மையம், பிரசவ வார்டு, ஆய்வு மையம், குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் பாலூட்டும் அறைகள் ,இயற்கை காற்று வசதி, பசுமைகளுடன் அமைக்கப்படும். யோகா சென்டர், மனநல மையமும் ஏற்படுத்தப்படும். சுகாதார மையங்களில் டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு இருப்பிட வசதியும் ஏற்படுத்தி தரப்படும்.
அத்துடன் காலாற நடந்து செல்வதற்கான வசதியுடன் மூலிகை தோட்டமும், சிறார்கள் விளையாடுவதற்கான வசதியும் ஏற்படுத்தி தரப்படும். சுகாதார மையத்திற்கு வருகிற பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதியும் ஏற்படுத்தப்படும். மாநிலத்திலுள்ள 2380 சுகாதார மையங்களும் நவீன நுட்பத்தில் மாற்றி அமைக்கப்படுகிறது. சுகாதார மையங்களில் பாதுகாப்பு விஷயத்திற்காக சிசி கேமராவும் பொருத்தப்படுகிறது. தற்போது 1 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது. அதை 30 ஆயிரம் பேர்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் என மாற்றி அமைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதார மையங்களில் 6 முதல் 20 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். இதில் பாதிக்கு பாதி படுக்கை வசதிகள் ஆண் மற்றும் பெண் நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும்