சென்னை: 33வது நினைவுதினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆரின் 33வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவைத்தலைவர் மதுசூதனன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, பென்ஜமின் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதை தொடர்ந்து, எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ‘தொண்டர்களின் விவேகத்திற்கு முன்னால், எதிரிகள் எவர் வந்தாலும், அந்தத் தீய சக்திகளின் திட்டங்கள் பலிக்காது. வெற்றி என்பது மட்டுமே நமது லட்சியமாக இருக்கும் என்று, உறுதி ஏற்போம். சட்டமன்றப் பொதுத் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம்‘ என உறுதி மொழியில் கூறப்பட்டிருந்தது.