சென்னை: சாதி மத வெறியர்களால் நேரடியாக எதுவும் செய்ய முடியாது என்பதால், நடிகர்களை இறக்கி விட்டு காலூன்ற பார்க்கிறார்கள் என்று திருமாவளவன் கூறினார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த விருது வழங்கும் விழாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பினர் அமெரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினர். இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் மருத்துவர் மீனாம்பாள் ஆகியோர் ”சமூக நீதிக்கான கி.வீரமணி விருதையும்” ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் திருமாவளவனுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசிக வன்னியரசு, துணை பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விருது பெற்ற திருமாவளவன் பேசியதாவது:
எனது பொது வாழ்வை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருமாவளவனை தனிமைப்படுத்த வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என செயல்படும் கட்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, திருமாவளவனை தனிமைப்படுத்த முடியாது. சாதி மத வெறியர்களால் நேரடியாக எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்து, நடிகர்களை இறக்கி விட்டு காலூன்ற பார்க்கிறார்கள். அதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அதனை வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.க. உடன் சேர்ந்து முறியடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.