நாகர்கோவில்: சென்னையை சேர்ந்த பிரபல பெண் டாக்டர் உள்பட பல இளம்பெண்கள், குடும்ப பெண்களிடம் நெருக்கமாக பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதான நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி (27) மீது இதுவரை 7 வழக்குகள் பதிவாகி இருந்தன. இதில் 6 வழக்குகள் பலாத்காரம், ஆபாச படமெடுத்து மிரட்டல், போக்சோ வழக்குகள் ஆகும். ஒரு வழக்கு கந்து வட்டி வழக்கு ஆகும். இந்த வழக்குகள் அனைத்தையும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக உள்ளனர்.
விசாரணையில் மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் அரசுத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் ஆகியோரிடம் காசி பழகுவது போல் நடித்து, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்தது. காசிக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர்கள் டைசன் ஜினோ மற்றும் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ேமலும் வெளிநாட்டில் உள்ள ஒரு நண்பரை இந்தியாவிற்கு கொண்டுவருவதான் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய நிபந்தனை ஜாமீன் மூலம் தினேஷ் வெளியே வந்தார்.
முன்னதாக நாகர்கோவிலை சேர்ந்த டேவிட் என்பவர் அளித்த கந்து வட்டி புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி காசி மீது நாகர்கோவில் 1வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். காசியின் வெளிநாட்டில் இருந்கும் நண்பர் இந்தியா வரவில்லை. இந்நிலையில் அவரது பாஸ்போர்டை முடக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காசி மீது கன்னியாகுமரி, நேசமணிநகர் மற்றும் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள வழக்கில், 3 போக்சோ வழக்குகளின் குற்றப்பத்திரியை தயாரித்துள்ளனர்.
மேலும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி அனுமதிக்காக இந்த குற்றப்பத்திரிகைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவரது அனுமதி கிடைத்தவுடன் நீதிமன்றத்தல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது என சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.