×

வாடிப்பட்டி அருகே தொழிலதிபர் காருடன் எரித்துக்கொலை?

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே காரில் எரிந்த நிலையில் தொழிலதிபர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் விராலிப்பட்டி பிரிவு எனும் இடம் உள்ளது. இங்கு சாலை ஓரமாக உள்ள ஒரு ஓடையில் சொகுசு கார் தீப்பற்றி எரிவதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சோழவந்தான் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். காரை சோதனையிட்டபோது, ஆண் உடல் முழுவதுமாக எரிந்த நிலையில் கிடந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், இறந்தவர் மதுரை, அய்யர்பங்களா பகுதியை சேர்ந்த சிவானந்தம் (58) என தெரியவந்தது. மருந்துகள் மொத்த விற்பனை செய்யும் மருந்துக்கடை தொழிலதிபரான இவர், நேற்று காலை கோவையில் உள்ள தனது உறவினரை பார்த்துவிட்டு, பழநி வழியாக மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். வந்தவர் காருக்குள்ளேயே தீயில் கருகி உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

காரில் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்தாரா, யாரும் கொலை செய்து காருடன் எரித்து விட்டுச் சென்றனரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தை மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார், சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Businessman ,death ,Vadippatti , Murder
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது