சென்னை: தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள மூன்று நம்பர் லாட்டரியில் பல கோடி ரூபாய் சுருட்டி கொடிகட்டி பறந்த சென்னையை சேர்ந்த முருகநாதன் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் லாட்டரியில் பணத்தை இழந்த மோகன்ராஜ் என்ற தச்சர், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களின் மரணத்துக்கு காரணமாக இருந்த மூன்று நம்பர் லாட்டரியை நடத்திவந்த முருகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதாகி உள்ள முருகநாதன் குழுக்களை அமைத்து தடை செய்யப்பட்ட லாட்டரியை தமிழகம் முழுவதும் புழக்கத்தில் விட்டு பல கோடி ரூபாய் சம்பாதிரித்து உள்ளார் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இவரது மேலாளராக சையத் ஒளியும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க விழுப்புரம் முதலாவது நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து மூன்று நாள் காவலில் விசாரிக்கவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்ட லாட்டரி சிட்டு தற்போது மூன்று நம்பர் லாட்டரி வடிவில் பலரது உயிரை குடித்துவருகிறது. இதில் முடிசூடா மன்னனாக வலம்வந்த முருகநாதன் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் லாபம் பார்த்து வந்தகாக கூறப்படுகிறது. அவர் ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள் ஆசியுடன் 3 நம்பர் லாட்டரி சிட்டு நடத்தி வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கைதாகி உள்ள முருகநாதனை விடுவிக்க கோரி ஆளும்கட்சி மாவட்ட செயலாளர்கள் அழுத்தம் தருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.