×

கணவருடன் குடும்பத்தகராறு இரண்டு குழந்தைகளின் கழுத்தை இறுக்கி கொன்று தாய் தற்கொலை

நெய்வேலி: குறிஞ்சிப்பாடி அருகே இரண்டு குழந்தைகளின் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா வெங்கடாம்பேட்டைஅடுத்த வேகாக்கொல்லை பிள்ளைபாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன்(34), பொக்லைன் ஆபரேட்டர். இவரது மனைவி சுதா(30). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு திலோக்நாத் (4), ஐஸ்வர்யா(3) என இரண்டு குழந்தைகள் இருந்தன. கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் ஐயப்பன் சுதாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் இருந்து ஐயப்பன் வெளியே சென்று விட்டார். இதனால் சுதா மனவேதனையில் இருந்துள்ளார். இதையடுத்து, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் தனது இரு குழந்தைகளையும் ஜாக்கெட் மூலம் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். பின்னர் சுதா புடவை மூலம் தனது கூரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அருகே வசித்து வரும் சுதாவின் மாமனார் சண்முகம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தைகள் மற்றும் மருமகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, அக்கம்பக்கத்தினர் வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி ஏஎஸ்பி மற்றும் போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளைக் கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Family dispute ,suicide ,children , Mother, suicide, child
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்