வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் கடந்த 120 ஆண்டுகளுக்கு பின் மக்கள் தொகை வளர்ச்சி மந்த நிலைக்கு சென்றுள்ளது. அமெரிக்காவில் குடியேற்ற கட்டுப்பாடுகள், கருவுறுதல், குறைதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 2019 - 2020ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த புள்ளி விவரங்களை அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 120 ஆண்டுகளில் அமெரிக்காவில் மக்கள் தொகை பெருக்கம் குறைந்த விகிதத்தில் அதிகரித்துள்ளது. ஜூலை 2019 முதல் 2020ம் ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க மக்கள் தொகை 0.35 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 11 லட்சம் அதிகமாகும்.
கடந்த ஜூலை நிலவரப்படி அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை, 32 கோடி ஆகும். கலிபோர்னியா உட்பட 16 மாகாணங்களில் மக்கள் தொகையானது 0.18 சதவீதம் குறைந்து 39 லட்சமாக உள்ளது. கொரோனா தொற்றின் பிரதான மையமாக இருந்த நியூயார்க் நகரம், 1 லட்சத்து 26 ஆயிரம் பேரை இழந்துள்ளதால் மக்கள் தொகையில் 0.65 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முன் எந்த நூற்றாண்டிலும் அமெரிக்காவில் இந்த அளவுக்கு மக்கள் தொகை பெருக்க சதவீதம் குறைந்ததில்லை. கடந்த 1918 - 1919ல் உலகத்தில் ஸ்பானிஷ் காய்ச்ச்சல் பரவிய காலத்தில் கூட அமெரிக்காவில் மக்கள் தொகை பெருக்கம் 0.49 சதவீதமாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்காக பல்லாயிரக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் வெளிநாடுகளில் இருந்த போதும் கூட இந்த சதவீதத்தை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.