புதுடெல்லி: கடுங்குளிர் நிலவும் உயரமான மலைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் உடல் நலம் பாதிக்கப்படுவதால், தங்களை உள்நாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும்படி மத்திய அரசுக்கு இந்தோ-திபெத் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தின் உயரமான மலைப் பகுதியில் உள்ள சீனா உடனான 3,488 கி.மீ. எல்லையை இந்தோ-திபெத் எல்லை படை வீரர்கள் கண்காணித்து வருகின்றனர். குளிர் நிறைந்த மலைப் பகுதி என்பதால், அங்கு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால், தங்களை 60:40 என்ற சதவீதத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தும்படி மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு முன்பு, அவர்களின் பணிக்காலம் முடியும் வரை எல்லை பாதுகாப்பு பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சுழற்சி முறையில் அவர்கள் உள்நாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டால், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவும், மாற்றம் காணவும் முடியும் என்று அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.