சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம் - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.
அதன் விபரம்:ஒரு முதலமைச்சர், தான் கொடுத்த வாக்குறுதியைத் தனது தொகுதிக்கே செய்து கொடுக்காத போது தமிழ்நாட்டின் மற்ற தொகுதிகளை இவர்கள் எப்படிக் கவனித்திருப்பார்கள். அவர் மீதும் அவரது அமைச்சர்கள் மீதும் தமிழக ஆளுநரிடம் ஊழல் பட்டியலைக் கொடுத்துள்ளோம். இது கூட முழுமையான பட்டியல் அல்ல. முதல் பட்டியல்தான். அடுத்தடுத்து பல்வேறு பட்டியல் வெளிவர இருக்கிறது. இந்த முதல் பட்டியலைப் பார்த்தே நடுங்க ஆரம்பித்துள்ளார் பழனிசாமி.
இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். பன்னீர்செல்வத்துக்குப் பணம் கொடுத்ததாக ஒரு அமெரிக்க நிறுவனமே சொல்லி இருக்கிறது. மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் விஜயபாஸ்கரின் கரன்சி லீலைகள் மத்திய அரசுக்கே தெரியும். அதற்கு மேல் நடவடிக்கை எடுத்தால் அவரிடம் தப்புவதே கஷ்டம். வருவாய் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பாரத் நெட் டெண்டர் ஊழல் அனைவருக்கும் தெரியும். அமைச்சர் ஜெயக்குமார் மீது வாக்கி டாக்கி ஊழல் புகார் கொடுத்துள்ளோம்.
தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் இழைத்தால் எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பதை தமிழக மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலமாக நிரூபித்து எடப்பாடி கூட்டத்துக்கும் இந்தியாவுக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரப்போகிறார்கள். நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மக்களுக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை நான் கேட்டிருந்தேன். இன்னும் ஏன் வழங்கவில்லை? எத்தனை நாட்கள் ஆகிவிட்டன? அதை உடனடியாக வழங்கவில்லை என்றால் திமுக விவசாய அணி சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை எச்சரிக்கையாகவே தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.