வி.கே.புரம்: நெல்லை மாவட்டம், வி.கே.புரம் டானா அனவன்குடியிருப்பு பகுதி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இங்குள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான வயல்களில் கரும்பு, நெல், வாழை, தென்னை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், பன்றிகள் இங்கு அவ்வப்போது புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அந்தவகையில் நேற்று அதிகாலை அனவன்குடியிருப்பு பகுதியில் சிங்கம்பெருமாள் குளக்கரைக்கு வருகைதந்த யானைகள் இங்குள்ள பனை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன.
அத்துடன் பாண்டி (60) என்பவரது தோட்டத்தில் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களையும், சொரிமுத்து (60), ராமலிங்கம் (70) ஆகியோரது வயலில் பயிரிட்டிருந்த நெற் பயிர்களையும் குட்டியானையுடன் வருகைதந்த 5 யானைகள் சேதப்படுத்திச் சென்றன. இதையடுத்து வயல்களில் பயிர்களுக்கு காவலுக்கு இருந்த பாண்டி, சங்கரம்மாள், மாரியப்பன், சுப்பிரமணியன் ஆகியோர் பட்டாசுகளை வெடித்து யானைகள் கூட்டத்தை விரட்டி அடித்தனர்.