×

ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் இருந்து அடுத்தடுத்து பரவும் புதிய வைரஸ்கள் மனித குலத்திற்கு பேராபத்து ஏற்படுத்தும் : பீதியை கிளப்பிய விஞ்ஞானி!!!

வாஷிங்டன் : எபோலா போன்ற அபாயகரமான வைரஸ்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானி ஜீன் - ஜக்கோஸ் முயம்பே எச்சரித்து உள்ளார். பலரது உயிரை பறித்த எபோலா வைரஸை கண்டுபிடித்தவர்களில் முக்கியமானவர் விஞ்ஞானி ஜக்கோஸ் முயம்பே ஆவார். சீனாவின் வூகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை வெகுவாக பாதித்தது. சுமார் ஓராண்டு ஆன நிலையில் இப்போதுதான் அதன் பாதிப்பு குறையத் தொடங்கி, தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இங்கிலாந்தில் பரிணாம மாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறிப்பட்டுள்ளதாகவும் இந்த  புதிய வைரஸ், தற்போதுள்ள வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவக் கூடியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்ததை அடுத்து, பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடிக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில், விஞ்ஞானி ஒருவர் பேசி இருக்கிறார். 1976ம் ஆண்டு பலரது உயிரை பறித்த எபோலா வைரஸை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜீன் - ஜக்கோஸ் முயம்பே நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், எபோலா போன்ற அபாயகரமான வைரஸ்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக எச்சரித்து உள்ளார். அபாயகரமான புதிய வைரஸ் நோய்கள் வன விலங்குகளிடம் இருந்து பரவி மனிதர்களை தாக்கும் என்று கூறிய அவர்,அடுத்தடுத்து பரவும் புதிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பலர் உயிரிழப்பார்கள் என்றும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் கிருமிகள் மனித குலத்திற்கு பேராபத்து ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் இருந்து வெளிவரும் புதிய மற்றும் ஆபத்தான வைரஸ்கள் மனித வாழ்விற்கு ஆபத்தை ஏற்படத்தலாம் என்றும் அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : scientist ,Africa ,panic , Scientist, Jean - Jacques Muambe
× RELATED சோமாலிய கடற்கொள்ளையர்களின் சதி இந்திய கடற்படை முறியடிப்பு