×

கொரோனா நெருக்கடியில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களே உண்மையான ஹீரோக்கள்!: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

டெல்லி: கொரோனா நெருக்கடியில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களே உண்மையான ஹீரோக்கள் என்பதை உலக நாடுகள் புரிந்துக் கொண்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லக்னோவில் கிங் ஜார்ஜ் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் உருவாகியுள்ள நிலையில், வைரஸை ஒழிக்கும் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

உலகத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா தொற்றில் இருந்து எந்த சூப்பர் மேனும் மக்களை காப்பாற்ற முடியாது என்று கூறிய அவர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களே உண்மையான சூப்பர்மேன்கள் என்பதை இந்த உலகம் புரிந்துக் கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேவையாற்றிய அவர்களுக்கு நாம் எப்போதும் நன்றிக்கடன் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் வாட்டி வதைத்து வருகிறது. இந்த வைரஸுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டு பல நாடுகளில் புழக்கத்தில் வந்துவிட்டன. கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய நாட்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இரவு, பகல் பாராது 24 மணிநேரமும் இடைவேளையின்றி தங்களின் உயிரைப் பணயம் வைத்து நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : frontline workers ,Rajnath Singh ,crisis ,Corona , Corona, front fieldman, hero, Rajnath Singh
× RELATED ரூ.39,125 கோடிக்கு ஏவுகணைகள் போர்விமானங்கள் வாங்குகிறது இந்தியா