திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில், பாதிரியாரும் கன்னியாஸ்திரியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா (அப்போது வயது 19). கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி விடுதி கிணற்றில் இறந்து கிடந்தார். முதலில் இது பற்றி விசாரித்த கோட்டயம் போலீசாரும், குற்றப் பிரிவு போலீசாரும் அபயா தற்கொலை செய்ததாக தெரிவித்தனர்.
பின்னர் விசாரித்த சிபிஐ.குழுவும் தற்கொலைஎன உறுதி செய்தது. 3வதா க விசாரித்த சென்னை சிபிஐ குழுதான், அபயா கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தது. பாதிரியார்கள் தாமஸ் ேகாட்டூர், ஜோஸ் புத்ருக்கயில், கன்னியாஸ்திரி செபி கைது செய்யப்பட்டனர். செபியுடன் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் தகாத உறவு வைத்திருந்ததை அபயா பார்த்ததால், அவரை கொலை செய்து கிணற்றில் வீசியதாக விசாரணையில் தெரிந்தது. இந்த வழக்கில் புத்ருக்கயிலை மட்டும் உயர் நீதிமன்றம் விடுவித்தது.
இந்த வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், தாமஸ் கோட்டூரும், செபியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனையை நீதிபதி இன்று அறிவிக்கிறார். தீர்ப்புக்குப் பிறகு தாமஸ் கோட்டூரும், செபியும் சிறையில் அடைக்கப்பட்டனர்.