×

தூய்மை இந்தியா திட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்க கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உயர் நீதிமன்றத்தில், தோழர் சட்ட மையத்தை சேர்ந்த வக்கீல் பன்னீர்செல்வம், தாக்கல் செய்த மனுவில், தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த திட்டம் வரவேற்பு பெற்ற போதும், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்குவதில்லை. இடர்படி வழங்க கோரி மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பினோம்.

இந்த கோரிக்கையை பரிசீலிக்கவும், தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கவும் தமிழக நகராட்சி நிர்வாகம் ஆணையருக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது. ஆனால், இந்த பரிந்துரை மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்க வேண்டும். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 15ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தவறினால், நீதிமன்றத்துக்கு உதவியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.

Tags : Case seeking to provide relief to cleaners in the Clean India project: Govt
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...