பெங்களூரு: சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் வரும் 24ம் தேதி முதல் பாரா கிளைடிங் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பல சுற்றுலா தலங்களில் நந்திமலையும் ஒன்றாகவுள்ளது. சர்வமத கோயில்கள், நினைவு சின்னங்கள், பூங்கா, வனம் என சுற்றுலா பயணிகளை கவரும் அனைத்து அம்சங்களும் உள்ளது. பனிக்காலத்தில் மலையில் நடந்து சென்றால் மேக கூட்டம் மனிதர்களை தழுவி செல்லும் வகையில் ரம்மியமாக இருக்கும். இதனால் குளிர் காலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த நந்திமலையை காண நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை, போலீசார் ஆகியோர் இணைந்து தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பில் பாராகிளைடிங் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையில் பாராகிளைடிங் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பல அரிய வகை பறவைகள் இடம் பெயர்ந்து விடும் என்ற அச்சத்தை சுற்றுச்சூழல் மற்றும் பறவை பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.