×

திருமக்கோட்டை அருகே கூரைவீட்டில் தீ : 3 ஆடுகள் பலி

மன்னார்குடி: திருமக்கோட்டை அருகே கூரைவீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 ஆடுகள் மற்றும் தளவாட சாமான்கள் எரிந்து நாசமானது. திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அடுத்த கன்னியாகுறிச்சி ஆற்றங் கரை தெருவில் வசிப்பவர் தங்கராஜ் (65). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னப்பொண்ணு(59). மகள் இந்திரா (37). பேரக்குழந்தைகள் பிரவீன் (18), தீப தர்சினி (15). அனைவரும் ஒரே கூரைவீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் இந்திரா தனது மகன் பிரவீனுடன் மேல் மருவத்தூர் செல்ல மாலை போட மன்னார்குடிக்கு சென்று விட்டார். தங்கராஜ் உள்ளிட்டவர்கள் மத்திய சாப்பாடு சாப்பிட்டு விட்டு வீட்டின் பின்புறத்தில் துணிகளை துவைப்பதற்காக சென்று விட்டனர்.

அப்போது, அடுப்பில் இருந்து தீப்பொறி கிளம்பி வீட்டுக்கூரையில் தீப்பிடித்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். பலத்தகாற்று வீசியதால் தீ மளமள வென்று பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருமக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் அங்கு விரை ந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த பீரோ, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும், வீட்டில் கட்டப்பட்டிருந்த மூன்று ஆடுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thirumakkottai , Fire accident
× RELATED ஒரு மாதத்திற்கு முன் தந்தை இறந்த...