டெல்லி: அமெரிக்காவின் மிக உயரிய விருதான லிஜியன் ஆஃப் மெரிட் விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பிரதமர் மோடி சார்பில் இந்த விருதினை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தியது, உலக அமைதிக்காக சேவை புரிந்ததற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சி ஓ பிரையன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவை உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு, ‛லிஜியன் ஆஃப் மெரிட் என்ற உயரிய விருதை அதிபர் டிரம்ப் வழங்கினார். இந்த விருதை மோடி சார்பில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சித்து பெற்று கொண்டார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; பிரதமரின் தலைமைபண்பு மற்றும் இந்தியா சர்வதேச தலைமை இடத்தை ஏற்க வேண்டும் என்ற கொள்கை, இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்தவும், சர்வதேச அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அவரது கொள்கைகளை இந்த விருது அங்கிகரித்துள்ளது. லிஜியன் ஆப் மெரிட் என்ற உயரிய விருதானது, அமெரிக்க அதிபரால், மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு இந்த விருது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.