சென்னை: புயல் பாதிப்பிற்குள்ளான 26 லட்சம் மக்களுக்கு மாநகராட்சி சார்பில் மூன்று வேளையும் இலவச உணவுகள் வழங்கப்பட்டுள்ளது என்று உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். சென்னை, ஷெனாய் நகரில் உள்ள, அம்மா அரங்கத்தில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தலைமையில், சென்னை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை நேற்று நடந்தது. அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித்துறை அதிகாரிகளின் சிறப்பான உழைப்புக்கு கிடைத்த பரிசாக, உள்ளாட்சித் துறை 140 விருதுகளை பெற்றுள்ளது. குடிநீர் திட்ட பணிகளை பொறுத்தவரை, ஒன்பது ஆண்டுகளில், ஒன்பாதாயிரத்துக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுகளில் தொய்வடைந்து இருந்த ஸ்மார்ட் சிட்டி பணிகள், தற்போது வேகமடைந்துள்ளது. மேலும் புயல் பாதிப்பிற்குள்ளான 26 லட்சம் மக்களுக்கு மாநகராட்சி சார்பில் மூன்று வேளையும் இலவச உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.