தூத்துக்குடி:கடந்த 2018, மே 22ல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தமிழக அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், இதற்கு சமூக விரோதிகளே காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் பொருட்டு கடந்த பிப்ரவரி மாதம் ரஜினிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதற்கு அவர் பதிலளித்திருந்தார். இந்நிலையில் ஆணையத்தின் 24வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வரும் ஜனவரி 19ம் தேதி துவங்குகிறது. இதில் நேரில் பங்கேற்று விளக்கம் அளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.