கோலார்: கோலார் நகரை முழுமையாக பசுமை நகரமாக மாற்றியமைக்கும் திட்டத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நகரசபை தலைவர் சுவேதா சபரீஷ் தெரிவித்தார். கோலார் நகரில் உள்ள மாவட்ட சாரண, சாரணியர் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து ‘‘மரம் வளர்ப்போம் மழைவளம் காப்போம்’’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசார துவக்க விழா நேற்று நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சுவேதாசபரீஷ் பேசும்போது, தற்போதைய காலத்தில் சுற்றுச்சூழலுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தி வருவது பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே. கடவுள் படைத்துள்ள ஜீவராசிகளில் அதிகம் புத்திசாலிகள் மனிதர்களாக இருந்தாலும் ஆடம்பரத்திற்காக சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் ெபாருட்களை அதிகம் பயன்படுத்துவதும் மனிதன் தான். நாம் வீதியில் வீசி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் மாசு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் அதை அறியாமல் சாப்பிடும் கால்நடைகள், பறவைகளின் உயிரையும் பறிக்கிறது. மரம் வளர்த்தால் மண்வளம் காக்கப்படும். அதன் மூலம் மழை வளம் கிடைக்கும்.
காலத்திற்கு ஏற்ற மழை பெய்தால், விவசாயம் செழிக்கும். விவசாயம் செழித்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மட்டுமில்லாமல் மாநிலத்தின் பொருளாதாரமும் உயரும். இவை அனைத்திற்கும் மூலமாக இருப்பது மழை. மழை பெய்ய ஆதாரமாக இருப்பது மரம். அதை வளர்க்க வேண்டும.்
மரம் வளர்ப்பதற்காக நாம் இன்று ஏற்படுத்தும் புரட்சி, நமது தலைமுறை முழுமையாக அனுபவிக்காமல் போனாலும் எதிர்கால தலைமுறை நிம்மதியாக வாழும் வாய்ப்பை ஏற்படுத்தும். ஆகவே கோலார் நகரை பசுமை நகரமாக மாற்றியமைக்கும் முயற்சிக்கு ஒவ்வொருவரும் துணையாக இருக்க வேண்டும். அனைவரும் ஓரணியில் இருந்தால் மட்டுமே நமது லட்சியத்தை அடைய முடியும்’’ என்றார்.