ஆந்திராவை சேர்ந்த வரபிரசாத் என்கிற இளைஞருக்கு மூளையில் கட்டி. குண்டூரில் இருக்கும் அரசு பொது மருத்துவமனையில் அவருக்கு மூன்று மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து கட்டியை அகற்றினார்கள். பிரசாத், டிவி பிரியர். டிவியில் வரும் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பார். அறுவை சிகிச்சையின் போது திடீரென அவருக்கு மயக்கநிலை தெளிந்துவிட்டது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க டிவி நிகழ்ச்சியைப் போட்டு பிரசாத்தை ‘கூல்’ செய்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.
டிவி நிகழ்ச்சியும் முடிந்துப்போக, ‘அவதார்’ படத்தை டிவிடியில் போட்டிருக்கிறார்கள். மனுஷன் பாட்டுக்கு ஜாலியாக டிவி பார்க்க அவரது மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்திருக்கிறது. ஆந்திர மருத்துவர்களின் இந்த நூதன மருத்துவ சமாளிப்பு, இப்போது உலகம் முழுக்க மருத்துவ உலகினர் வியப்பாக பேசக்கூடிய சம்பவமாக மாறியிருக்கிறது. ஆபரேஷனும் சக்சஸ், பேஷண்டும் உடல் நலம் பெற்று டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்.