×

ஆபத்தில் தமிழகம் உட்பட 6 மாநிலத்தின் ‘நீர் கோபுரம்’... பேரழிவின் வலையில் மேற்குதொடர்ச்சி மலை : ‘யுனெஸ்கோ’ எச்சரிக்கை

புதுடெல்லி, :தமிழகம் உட்பட 6 மாநிலத்தின் ‘நீர் கோபுரம்’ என்று அழைக்கப்படும் மேற்குதொடர்ச்சி மலையானது பேரழிவின் வலையில் சிக்கியுள்ளதால், அதனை மீட்டெடுக்க வேண்டும் என்று ‘யுனெஸ்கோ’ எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள தபதி நதியில் தொடங்கி தமிழகத்தின் கன்னியாகுமரி வரை மேற்குத் தொடர்ச்சி மலை நீண்டிருக்கிறது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளம் ஆகிய ஆறு மாநிலங்கள் வழியாக இந்த மலை பரந்து விரிந்து கிடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் மிகப் பெரிய சிகரம் ஆனைமுடி. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அகஸ்திய மலை, பெரியாறு, ஆனைமலை, நீலகிரி, தலைக்காவிரி, குத்ரமுக், சையாத்ரி ஆகிய மலை தொகுப்புகள் உள்ளன. மேற்கண்ட ஆறு மாநிலங்களில் உள்ள 30 கோடி மக்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கான நேரடி மற்றும் மறைமுகத் தேவைகளை மேற்குத் தொடர்ச்சி மலைதான் நிறைவேற்றுகிறது.

இந்நிலையில், இயற்கை பாதுகாப்பு தொடர்பான யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ ஆலோசனைக்  குழுவான ‘இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்’ (ஐ.யூ.சி.என்) மறுஆய்வு  அறிக்கையைத் தயாரித்துள்ளது. இதில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் ‘தீவிர அக்கறை செலுத்த வேண்டிய இடம்’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாயை பொறுத்தமட்டில் மேற்குதொடர்ச்சி மலையும், மற்றொரு இடம் அசாமில் உள்ள மனஸ் வனவிலங்கு சரணாலயமும் இந்த பட்டியலில் உள்ளன. மேலும், மேற்குத்  தொடர்ச்சி மலையானது காலநிலை மாற்றம், பலத்த மழை மற்றும்  கோடை காலம், நீர் மற்றும் காற்று மாசுபாடு, சுற்றுலா, காடுகள் அழிப்பு,  வேட்டையாடுதல், வன சாலை - ரயில் திட்டங்கள், அணைகள், சுரங்க மற்றும் குவாரி  மற்றும் காட்டுத்தீ போன்றவற்றால் பேரழிவிற்கு  உட்படுத்துகின்றன.

இதை சமாளிக்க இயற்கை பாதுகாப்புக்கு நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் தேவை. மேற்குதொடர்ச்சி மலையானது சாதாரணமான வாழ்விடமல்ல. 30 கோடி மக்களுக்கு தண்ணீரை வழங்கும் இந்திய துணைக்  கண்டத்தின் நீர் கோபுரமாக உள்ளது. எனவே, முழு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியும்  பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களின் உயிர்நாடியான மேற்குத் தொடர்ச்சி மலை ஆபத்தில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை மீட்க உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால், மேற்குத் தொடர்ச்சி மலையை நம்பியுள்ள மக்களின் வாழ்க்கையும், அவற்றின் பல்லுயிர் பெருக்கமும் மோசமாக இருக்கும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Water tower ,states ,Tamil Nadu ,Western Ghats ,UNESCO ,disaster , Western Ghats, UNESCO, Warning
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து