புதுடெல்லி: ஊரடங்கு நிலையிலும் 2020ம் ஆண்டுக்கான நீட், ஜெஇஇ தேர்வுகளை வழக்கமான காகித முறையிலேயே சிபிஎஸ்இ நடத்தியது. இதேவழியில் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும் நடத்தப்படுமா? அல்லது இணைய வழியில் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கமளித்த மத்திய கல்வி அமைச்சகம், ‘10, 12ம் வகுப்புக்கான தேர்வுகள் வழக்கமான பேனா, காகித முறையில் மட்டுமே நடத்தப்படும்’ என தெளிவுபடுத்தி இருந்தது. ஆனாலும், தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கடந்த 10ம் தேதியன்று, மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். இது பற்றி நாளை மீண்டும் அவர் ஆசிரியர்களுடனும் விவாதிக்கிறார். இந்த கலந்துரையாடலுக்கு பிறகு தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ‘பாதுகாப்பு காரணங்களை உறுதிப்படுத்த, மாதிரி தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், மாணவர்களும், ஆசிரியர்களும் அரசு நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகி விடுவார்கள்’ என்று பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.