சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது, மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த வாரம் 20க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியது. இந்த அத்துமீறல் இன்றும் தொடர்கதையாகி வருகிறது.
இது மிகுந்த கவலைக்குரியது. மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் மத்தியில் ஏற்பட்டு இருக்கும் அச்சத்தை போக்கி, வருங்காலங்களில் நம்பிக்கை ஏற்படும் வகையில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித பங்கமும் ஏற்படாதவாறு காக்க வேண்டும். மத்திய அரசு இனிமேலும் தாமதம் இல்லாமல் இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்களை மீட்க வேண்டும். அதோடு இந்த அத்துமீறல்கள் மேலும் தொடராமல் இருக்க பேச்சுவார்த்தையின் மூலம் நிரந்தர தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.