சென்னை: அரசு விழாவில் அல்லாமல் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் பொங்கலுக்கு ரூ.2500 அளிக்கப்படும் என்று அறிவித்தது முறையா. இது பொங்கலுக்கு பரிசுத் தொகையா. வாக்குகளுக்கு முன்பணமா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் சார்பில் தேர்தல் பரப்புரையைத் துவக்கிய எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வழக்கத்திற்கு மாறான அளவில் பொங்கல் பரிசு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
ஒரு முதல்வராக செய்ய வேண்டிய அறிவிப்பை ஒரு கட்சியின் தேர்தல் பரப்புரையில் செய்வது முறையா. இது அப்பட்டமான விதிமீறலாகும். இது மக்களுக்கான நலத் திட்டமா அல்லது வாக்குகளுக்காக வழங்கப்படும் முன்பணமா என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணத்தை அறிவிக்காமல் பொங்கல் பரிசு அறிவித்திருப்பது கவனத்தைத் திசைதிருப்பும் ஏமாற்று வேலையாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.