×

கொள்ளிடம் அருகே குடியிருப்பில் 2 வாரமாக வடியாத மழை நீர்

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த கூத்தியம் பேட்டை கிராமத்தில் காமுடிகோயில் தெரு உள்ளது. இப்பகுதியில் குடிசை வீடுகள் அதிகளவில் உள்ளன. சில வாரங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக, இப்பகுதியில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. அந்த தண்ணீர் வடியாமல் இருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பெய்த மழை நீரும், அதனுடன் சேர்ந்து கொண்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், கோயிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காமுடி கோயில் தெருவில் கடந்த இரண்டு வாரங்களாக மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் பாம்பு, பூரான் மற்றும் நச்சு பூச்சிகள் நுழைந்து வருகின்றன. இதனால் மிகவும் சிரமம் அடைந்து உள்ளோம். இதுவரை ஊராட்சி நிர்வாகம் சார்பில்  தண்ணீரை வடிய வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி வடிகால் வசதி ஏற்படுத்தி  மழைநீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags : Kollidam ,apartment , 2 weeks of rain water in an apartment near Kollidam
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி