சென்னை:வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த நிலையில், ராபத்து உற்சவத்தின் முதல்நாளான டிசம்பர் 25ம் தேதி அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை காண ஏராளமான பக்தர்கள் பெருமாள் கோயில்களுக்கு வருவது வழக்கம். ஆனால், இந்தாண்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் போன்ற பெரிய கோயிலில் ெசார்க்கவாசல் திறப்பின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் காலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் குறிப்பிட்ட பக்தர்களை மட்டுமே அன்றைய தினம் அனுமதிக்க கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது, பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சிறிய கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு இன்னும் ஒரிரு நாட்களே உள்ள நிலையில் கமிஷனர் அலுவலகம் அனுமதி கொடுத்தால் மட்டுமே கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்ய முடியும். இல்லையெனில், சொர்க்கவாசல் திறப்பின் போது, பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் உடனடியாக உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கோயில் அலுவலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.