கீழக்கரை: கீழக்கரையை சேர்ந்தவர் ஆனந்த் (எ) அப்துல்லா (64). இவர் கடந்த 47 ஆண்டுகளாக புறாக்கள் வளர்த்து வருகிறார். மேலும் இவர் புறா பந்தயத்தில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்றுள்ளார். ஒரு போட்டியில் இவரது புறா 1,500 கிமீ தூரம் வரை பறந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவரது கூண்டில் ஒரு புறா முட்டையில் இருந்து 3 கால்களுடன் புறாக்குஞ்சு வெளிவந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் புறாவை பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து அப்துல்லா கூறுகையில், ‘‘வெளிநாடுகளில் நடக்கும் புறா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளேன். சில நாட்களுக்கு முன்பு எனது கூண்டில் 3 கால்களுடன் புறா குஞ்சு பிறந்தது. இதை கூடுதல் கவனத்துடன் பராமரித்து வருகிறேன்’’ என்றார்.