தாராபுரம்: தாராபுரம் உப்பாறு அணைக்கு பரம்பிக்குளம் ஆழியாறு அணையிலிருந்து பாசன நீரை விடுவிக்கக்கோரி உப்பாறு பாசன விவசாயிகளும் திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரும் கடந்த 10 நாட்களாக உப்பாறு அணை அருகே காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 11வது நாளான நேற்று சங்கத்தின் தலைவர் அர்ஜூனன் தலைமையில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிவகுமார் முருகானந்தம் முன்னிலையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின்போது தொப்பம்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
போராட்டத்தின் ஒரு கட்டமாக நியாயப்படி தங்களுக்கு வழங்க வேண்டிய பாசன நீரை விடுவிக்க தமிழக முதல்வர் பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். உப்பாறு பாசன விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க மறுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நீதி கேட்டும், கோட்டை வாசலில் ஆராய்ச்சி மணியை கட்டி ஆட்சி செய்த மனுநீதிச் சோழனின் நீதி தவறாத நெறிமுறையை ஆட்சியாளர்களின் செவிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் ஆராய்ச்சி மணி கட்டி அதனை ஒழிக்க செய்து நூற்றுக்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.