நியூயார்க்: அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டிற்கு மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 2-வது அவசரகால தடுப்பூசி ஆகும்.மாடர்னா தடுப்பூசி மருந்தை 30,400 பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டதில், இந்த மருந்து 94.1 சதவீதம் செயல்திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவரும் போதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் மார்டனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டிற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மார்டனா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் முதல் நாடு அமெரிக்கா என்ற இடம் பெற்றுள்ளது. மார்டனா தடுப்பூசி இப்போது கிடைக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவீட் செய்துள்ளார். பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.