சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். இது வெட்கக்கேடானது. இந்த சட்டத்தின் மூலம் அதானியும், அம்பானியும் பொருட்களை பதுக்கி வைத்து ஒரு செயற்கை பஞ்சத்தை ஏற்படுத்த முடியும். அதனால் தான் விவசாயிகள் அச்சப்படுகிறார்கள். ஆகவே தான் விவசாயிகள் வைக்கின்ற கோரிக்கை குறைந்தப்பட்ச ஆதார விலையை கொண்டுவர வேண்டும். இந்த சட்டங்கள் வேண்டாம். ஏன், பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் மட்டும் போராடுகிறான் என்றால் இந்தியாவுக்கு தேவையான 60 விழுக்காடு விவசாயம் அங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், விவசாய தொழிலை பாதுகாக்க வேண்டும். என்று சொன்னால் இந்த சட்டங்களை தூக்கி எறிய வேண்டும் என்றார்.