புதுடெல்லி: ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவன இயக்குனர்கள் மீது ரூ. 7,926 கோடி நிதி மோசடி வழக்கில், சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வங்கியில் கடன் பெற்றுவிட்டு நாட்டை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியை மிஞ்சும் வகையில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த, ‘டிரான்ஸ்ட்ராய் இந்தியா’ என்ற தனியார் நிறுவனம் ரூ. 7,926 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான செருகுரி ஸ்ரீதர், கூடுதல் இயக்குனர்கள் ராயபதி சாம்பசிவ ராவ், அக்கினேனி சதீஷ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் ஆர்.கே. கவுர் கூறுகையில், ``கனரா வங்கியிடமும், பிற வங்கிகளிடமும் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் போலி ஆவணங்களை தாக்கல் செய்து முறைகேடாக ரூ.7,296.01 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஐதராபாத், குண்டூர் உள்பட நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கி உள்ளன,’’ என்றார்.