×

ஐடிஐ படித்த ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் கனவிலும்ஆட்சியாளர்கள் மண் அள்ளி போட்டிருக்கிறார்கள் :டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை : தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்களை நிரப்புவதைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (டிச. 18) வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப முயற்சிக்கும் பழனிசாமி அரசின் நடவடிக்கை கடுமையான கண்டனத்திற்குரியது. ஏற்கெனவே மின்வாரிய பொறியாளர் பணிகளுக்கு வெளிமாநிலத்தவர்களை நியமித்ததால் தமிழகத்தில் பொறியியல் படித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இப்போது பராமரிப்புப் பணியிடங்களுக்கு ஆளெடுப்பதையும் தனியாரிடம் ஒப்படைத்தால், அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிப்பளிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கும்? இதனால் மின்வாரியத்தில் வயர்மேன், ஹெல்பர் போன்ற வேலைகளுக்குச் செல்லலாம் எனக் காத்திருக்கும் ஐடிஐ படித்த ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் கனவிலும் இந்த ஆட்சியாளர்கள் மண் அள்ளி போட்டிருக்கிறார்கள்.

முதல்வரும், அவருக்கு நெருக்கமான அந்தத் துறையின் அமைச்சரும் மின்துறை வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு அடுத்தடுத்து இழைக்கப்பட்டு வரும் இந்த அநீதிக்கு துணை போவது ஏன்?, அதன் பின்னணி என்ன? என்பன போன்ற சந்தேகங்கள் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்றன.

மக்களின் அத்தியாவசிய தேவையான மின்விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகளைக் கூட நேரடியாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு திறனற்றதாக தமிழக மின்சாரத்துறை மாறிவிட்டதா? அவ்வளவு திறமையாக அந்தத்துறையின் அமைச்சர் நிர்வாகம் செய்து வருகிறாரா? இப்படியே போனால் மின்வாரியத்தை மொத்தமாக தனியாருக்கு தாரை வார்த்துவிடுவார்களா? என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

எனவே, மின்பராமரிப்புப் பணிகளை டெண்டர் மூலம் தனியாரிடம் ஒப்படைத்து, அந்தப் பணிகளுக்கு அவர்கள் வழியாக ஊழியர்கள் நியமிப்பதைக் கைவிட வேண்டுமென பழனிசாமி அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


Tags : rulers ,youths ,Tamil Nadu ,DTV Dinakaran ,ITI , Tamil Nadu youth, rulers, DTV Dinakaran, condemnation
× RELATED 300 அடி பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி: ட்ரோன் உதவியுடன் மீட்பு