புதுச்சேரி: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அழைத்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.புதுச்சேரி சட்டசபை கமிட்டி அறையில் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: உலக சந்தையில் எரிவாயு, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலையையும் சமையல் எரிவாயு விலையையும் பாஜ அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு விலை ரூ.350 ஆக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் கொடுக்கப்பட்டு வந்த மானியத்தை குறைத்து தற்போது முழுவதுமாக நிறுத்திவிட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயுவுக்கு ஒரு ரூபாய் ஏற்றினால், தெருவில் இறங்கி பாஜக போராடியது. தற்போது விலையை கடுமையாக உயர்த்தி நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் செய்கிறது.
நடப்பாண்டில் 18வது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ.610 இருந்த சிலிண்டர் விலையை ரூ.710 ஆக உயர்த்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது. மக்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏறியுள்ளதால் பிரதமர் உடனடியாக தலையிட்டு முதல் கட்டமாக சிலிண்டருக்கு ரூ.100 ரூபாய் உயர்த்தியதை குறைக்க வேண்டும்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து 2 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நியாயமானது. எனவே டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் மோடி அழைத்து பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.