பெங்களூரு, :புத்தாண்டு கேளிக்கை விருந்து நிகழ்ச்சிகளுக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில் கொரோனா பரவல் உள்ளதால், அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் உள்ள எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அதிரடி உத்தரவிட்டு இருந்தார். மேலும் பெங்களூருவில் புத்தாண்டுக்கு முன்பாக வருகிற 31-ந் தேதி இரவு 11 மணிக்கு வழக்கம் போல மதுபான விடுதிகளை மூடிவிடும்படியும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் புத்தாண்டுக்கு ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரெஸ்டாரண்டுகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது என்றும் அங்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் அனுமதி இல்லை என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களை ஒன்று சேர்ந்து நடனமாடுவது, விருந்துகள் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 30-ந் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 2-ந் தேதி வரை 4 நாட்கள் அமலில் இருக்கும். இந்த 4 நாட்களிலும் ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், பப்புகளில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கடைப்பிடிக்கவில்லை எனில், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.