விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 2வது நாளாக பெய்த கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல இடங்களில் தரைப்பாலத்தின் மேல் உபரிநீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகின்றது. இதனால் பாம்பை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் அடுத்த காணக்குப்பம், அகரம், சித்தாமூர் பம்பை ஆற்றின் தரைப்பாலம் தண்ணீரில் உடைந்து சேதமடைந்தது.
இதனால் அவ்வழியாக செல்லும் 30 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் தரைப்பாலத்தில் சிறுவர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் திறந்துவிடப்படும் உபரிநீரால் தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளதால் அதை கடக்க மக்கள் முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.