×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு கணக்கெடுப்பில் யானை தாக்கி 2 பேர் பலி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நேற்று நடந்த வனவிலங்கு கணக்கெடுப்பு பணியின்போது யானை தாக்கி வனக்காவலர், தன்னார்வலர் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக் காலத்திற்குப் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. 22ம் தேதி வரை 6 நாட்களுக்கு இப்பணி நடைபெறுகிறது. புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள 10 வனச்சரகங்களில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 350 பேர் குழுவாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட கல்லம்பாளையம் வனப்பகுதியில் மாயாற்றுக்கு தெற்குப் பகுதியில் வனக்காப்பாளர் பொன் கணேஷ் தலைமையில் வனக்காவலர் சதீஷ், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவாக இந்த பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புதர் மறைவில் நின்றிருந்த யானை, அவர்களை திடீரென துரத்தியது. இதில், வனக்காவலர் சதீஷை யானை தும்பிக்கையால் பிடித்து கீழே போட்டு மிதித்து கொன்றது. அவரை காப்பாற்ற முயன்ற வனக்காப்பாளர் பொன் கணேசையும், தூத்துக்குடியைச் சேர்ந்த தன்னார்வலர் பிரபாகரனையும் யானை தாக்கியது. இதில் பிரபாகரன் பரிதாபமாக இறந்தார். பொன்கணேஷ் படுகாயமடைந்தார். வனத்துறை அதிகாரிகள் வந்து அவரை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி உயிரிழந்த சதீஷ் (21) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர். திருமணமாகாதவர். யானை தாக்கி 2 பேர் இறந்த சம்பவம்,சத்தியமங்கலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Satyamangalam Tiger Reserve , 2 killed in wildlife survey at Satyamangalam Tiger Reserve
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...