பீஜிங்: நிலவின் மேற்பரப்பில் இருந்து பாறை துகள்களை சேகரித்த சீனாவின் சேஞ்ச்- 5 விண்கலம், வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக, ‘சேஞ்ச்-5’ என்ற ஆளில்லா விண்கலத்தை கடந்த மாதம் 24ம் தேதி சீனா விண்ணில் செலுத்தியது.
கடந்த 1ம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அது, அங்கிருந்து பாறை துகள்களை சேகரித்துக் கொண்டு 3ம் தேதி பூமிக்கு புறப்பட்டது. இதனை தொடர்ந்து, சேஞ்ச் 5 திரும்புவதற்குரிய சுற்றுப்பாதை திருத்தம் கடந்த 14ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. நிலவில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த சேஞ்ச் 5, நேற்று மங்கோலியாவின் சிசிவாங்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
நிலவில் இருந்து பாறை துகள்களை சேகரிக்கும் சீனாவின் இந்த முயற்சி வெற்றி அடைந்ததை அடுத்து, 44 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவில் இருந்து பாறை துகள்களின் மாதிரிகளை சேகரித்து எடுத்து வந்த 3வது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. அமெரிக்கா நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்து 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது. அதேபோல் கடந்த 1976ம் ஆண்டு ரஷ்யாவின் லுனா 24 திட்டத்தின் மூலம் நிலவின் பாறை துகள்கள் சேகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 44 ஆண்டுகளுக்கு பின் சீனா நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்துள்ளது.