புதுடெல்லி: துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்ந்த அவதூறு வழக்கில், அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு ஆட்சேபணை எழுப்பிய பாஜ எம்.பி மனோஜ் திவாரி, எம்எல்ஏ விஜேந்தர் குப்தா ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு பள்ளிகளில் வகுப்பறை கட்டும் திட்டத்தில் ஊழல் செய்தார் என துணை முதல்வரும், கல்வி இலாகாவை கைவசம் வைத்து உள்ளவருமான சிசோடியா மீது பாஜ எம்.பிக்கள் மனோஜ் திவாரி, ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், பர்வேஷ் வர்மா, எம்எல்ஏக்கள் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, விஜேந்தர் குப்தா, செய்தித்தொடர்பாளர் ஹரிஷ் கன்னா ஆகியோர் குற்றச்சாட்டு சுமத்தினர். இதுதொடர்பாக சிசோடியா மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு கடந்த ஆண்டு தொடுத்தார்.
அந்த வழக்கில் நேரில் ஆஜரான சிசோடியா குற்றம் சாட்டிய அனைவரையும், குற்றவாளிகள் எனக் கூறிய மாவட்ட நீதிமன்றம், திவாரிக்கும், குப்தாவுக்கும் சம்மன் அனுப்ப கடந்த ஆண்டு நவம்பர் 28ல் உத்தரவிட்டது. அதன் பின் அவர்கள் ஜாமின் பெற்றிருந்தனர். சம்மன் நடவடிக்கையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் திவாரியும், குப்தாவும் முறையீடு செய்தனர். அந்த முறையீட்டை சில தினங்களுக்கு முன் விசாரித்த நீதிபதி அனு மல்ஹோத்ரா, வியாழனன்று முடிவு கூறுவதாக தெரிவித்திருந்தார். அதன்படி நீதிமன்றம் நேற்று கூடியதும், திவாரி, குப்தா ஆகியோரின் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி கூறினார்.