கோலார்: கர்நாடக சட்டமேலவையில் நடந்த மோதல் சம்பவம் தேசியளவில் அவமதிப்பு ஏற்படுத்தியுள்ளதால், மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாக மஜத மேலவை உறுப்பினர் கோவிந்தராஜூ தெரிவித்தார். இது குறித்து கோலார் நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, சட்ட மேலவை தலைவராக இருக்கும் பிரதாப்சந்திரஷெட்டிக்கு எதிராக பாஜ கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவதற்காக சிறப்பு மேலவை கூட்டம் கடந்த 15ம் தேதி கூட்டப்பட்டது. அவை கூடுதலாக மார்ஷல்கள் மணி அடித்தும் மேலவை தலைவர் அவைக்கு வராமல் இருந்தார். இதனால் துணைதலைவராக இருக்கும் தர்மேகவுடாவை இருக்கையில் அமர்த்தார்.
அதை பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்கள் தெருவில் சண்டை போடுவது போல், துணைத்தலைவரை இருக்கையில் இருந்து வலுகட்டாயமாக இழுத்து தள்ளி ரகளையில் ஈடுபட்டனர். மேலவையில் நடந்த சம்பவம், கர்நாடகாவில் மட்டுமல்லாமல் தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை. மாநில சட்டமேலவை வரலாற்றில் இது கரும்புள்ளியாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் மக்கள் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியுள்ளதால், அந்த அவையில் நானும் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் மக்களிடம் தார்மீக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.