பெங்களூரு: பெங்களூரு மாநகரின் தோற்றத்தை இரண்டே வருடத்தில் புதிதாக மாற்றிக்காண்பிப்போம் என முதல்வர் எடியூரப்பா கூறினார். பெங்களூரு, விதானசவுதா விருந்து அரங்கில் பெங்களூரு மிஷன் 2020-22 என்ற நிகழ்வு நடந்தது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்வர் எடியூரப்பா தொடங்கி வைத்து பேசியதாவது: பெங்களூருவில் அடிப்படை வசதிகள் மேற்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமாகும். இதை அடிப்படையாக கொண்டு பெங்களூரு மிஷன் 2020-22 தயாரிக்கப்பட்டுள்ளது. குடிநீர், போக்குவரத்து வசதிகள், திட, திரவ கழிவு மேலாண்மை உள்ளிட்ட அனைத்தும் சர்வதேச தரத்தில் மாற்றப்படுகிறது. உலகில் நான்கு முக்கியமான நகரங்களில் நமது பெங்களூருவும் ஒன்றாகும். வெளிநாடுகளை சேர்ந்த 500 நிறுவனங்கள் மாநகரில் செயல்படும் நிலையில் அடிப்படை வசதிகள் சர்வதேச தரத்திற்கு இணையாக மாற்றவேண்டியது மிகவும் அவசியமாகும்.
இதை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் பெங்களூரு மிஷன் 2020-22 வகுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வருடத்தில் இத்திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தி பெங்களூருவின் தோற்றம் மாற்றி அமைக்கப்படும். இதற்கு தேவையான நடவடிக்கை விரைந்து எடுக்கவேண்டும் என்பது அரசின் நோக்கமாகும், என்றார். துணை முதல்வர் அஸ்வத்நாராயண், அமைச்சர்கள் பைரதிபசவராஜ், அசோக், எம்எல்ஏ உதய்கருடாச்சார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.