திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த வன்னிப்பேர் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காகவும், மருத்துவமனைக்கு செல்லவும் வன்னிப்பேர் கிராமத்தில் இருந்து திண்டிவனம்- மரக்காணம் சாலையில் உள்ள ராஜாம்பாளையம் வந்து பேருந்து ஏறுவது வழக்கம்.இந்நிலையில் நேற்று திண்டிவனம் மற்றும் மரக்காணம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பியது. இதனால் பிரம்மதேசம் ஏரி மற்றும் வன்னிப்பேரில் உள்ள செம்பேரி ஏரி நிரம்பி கலிங்கல் வழியாக மழை நீர் அதிக அளவில் வெளியேறியதால் வன்னிப்பேரில் உள்ள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ராஜாம்பாளையத்திலிருந்து வன்னிப்பேருக்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கிராமத்திலிருந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஓடையின் இருபுறமும் கயிறு கட்டி பொதுமக்களை பத்திரமாக அழைத்து வந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மரக்காணம் வட்டாட்சியர் உஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு பொதுமக்கள் வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.