கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுவேதா(20). இவர் பிஎஸ்சி நர்சிங் முடித்துள்ளார். இவரும் விருத்தாசலம் அருகே உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதமாக சுவேதாவிற்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதில் விருப்பம் இல்லாத சுவேதா கடந்த 12ம்தேதி வீட்டை வீட்டு வெளியேறி ராஜேந்திரப்பட்டினத்தில் உள்ள கார்த்திக் வீட்டிற்கு வந்து, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் நேற்று கடலூர் எஸ்பி அலுவலகத்தில் சுவேதா கொடுத்துள்ள புகாரில், நான் கடந்த இரண்டு வருடமாக கார்த்திக்கை காதலித்து வந்தேன்.
எனது வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததால் அதில் விருப்பம் இல்லாமல் கடந்த 12ம்தேதி வீட்டை விட்டு வெளியேறி ராஜேந்திரப்பட்டினத்தில் உள்ள கார்த்திக் வீட்டிற்கு வந்து இருவரும் திருமணம் செய்துகொண்டோம். என்னை யாரும் கடத்தவில்லை, என் சுய விருப்பத்தின் பேரில்தான் திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு வகுப்பை சார்ந்தவர்கள் என்பதால் என் பெற்றோர் மற்றும் உறவினர்களால் ஆபத்து உள்ளது. எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், என கூறியுள்ளார். போலீசார் இரு தரப்பையும் அழைத்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.