திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் 3ம் நாளான இன்று நம்பெருமாள் முத்துபாண்டியன் கொண்டை அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14ம் தேதி துவங்கியது. பகல்பத்து உற்சவம் 3ம் நாளான இன்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து முத்து வளையம் எனப்படும் முத்துபாண்டியன் கொண்டை, மார்பில் இருதலை பட்சி, முத்துச்சரம், ரத்தின அபயஹஸ்தம் மற்றும் ரத்தின திருவடி உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து புறப்பட்டு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காலை 7.45 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையர் சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். மதியம் 2 மணி முதல் 3மணி வரை திருப்பாவாடை கோஷ்டியும், மாலை 4முதல் 6 மணி வரை பொது ஜனசேவையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.