டெல்லி : தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னரே பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன.அந்த வகையில், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்ட போது அவருக்கு டார்ச் லைட் ஒதுக்கப்பட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு அந்த சின்னம் வழங்கப்படவில்லை.
தாமதமாக வந்ததாலும் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு அந்த சின்னம் கொடுக்கப்பட்டு விட்டதாலும், மக்கள் நீதி மய்யத்துக்கு தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னம் கொடுக்கவில்லை. ஆனால், புதுச்சேரி மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டு விட்டது. இது தொடர்பாக பல கருத்துக்கள் எழுந்து வருகிறது. நேற்று பிரச்சாரத்தின் போது பேசிய கமல்ஹாசன், சட்ட ரீதியாக போராடி சின்னத்தை மீட்போம் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்திலும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கமல்ஹாசன் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்திருக்கிறார். அதன்படி, தமிழகத்தில் பேட்டரி - டார்ச் சின்னம் ஒதுக்கப்படாதது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்காக, சந்தோஷ் பாபு மற்றும் வழக்கறிஞர்கள் குழு டெல்லி சென்றது. தேர்தல் ஆணையத்திடம் அந்தக் குழு முறையீடு செய்துள்ளது. கோரிக்கை பரிசீலிக்கப்படுமா? என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.