×

புளியரை, கல்லிடைகுறிச்சியில் தோப்பில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

செங்கோட்டை: புளியரை, கல்லிடைக்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி கிராம தோட்டங்களில் புகுந்த யானைகள் பயிர்களை நாசப்படுத்தின. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் புளியரை பகவதிபுரம் உட்கோணம் பகுதியில் கடந்த 9ம் தேதி புகுந்த யானைக் கூட்டம் விவசாய தோட்டங்களில் தென்னை, மா உள்ளிட்ட 100 மரங்களை வேருடன் பிடுங்கியும் கிளைகளை ஒடித்தும் நாசம் செய்தது. பொதுமக்கள் தகவலையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் இரண்டு நாட்களாக வெடி வைத்து யானைகளை விரட்டினர்.

இந்நிலையில் நேற்று புளியரை உட்கோணத்திலிருந்து கிழக்குப் பகுதியான புளியரை பகவதிபுரம் கோரன்குழி பகுதியில் புகுந்த யானை கூட்டம் அந்த பகுதியில் உள்ள வேலு, பேச்சி நம்பியார், பழனிச்சாமி, சிவசுப்பிரமணியன், வலஜலகுமாரி, குருதேவா, கந்தசாமி ஆகியோருக்கு சொந்தமான தென்னந்தோப்புகளில் புகுந்து சுமார் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி நாசம் செய்தது. இதுகுறித்து விவசாயிகள் வனத்துறைக்கும் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகாத வண்ணம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அகழிகளை உருவாக்க வேண்டும். மின் வேலி அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேபோல் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் மீண்டும் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையின் அருகே அமைந்துள்ள பொட்டல் கிராமத்தில் எலுமிச்சையாறு ஓடை பீக்கம்பள்ளம் பகுதியில் உள்ள தோட்டங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்கள் மற்றும் மரங்களை அழித்து அட்டகாசம் செய்து வருகின்றன, கடந்த சில தினங்களாக இப்பகுதி விவசாயிகளான பெருமாள், வெங்கடேஷ், ராசாமணி, சீனிவாசன் தோட்டங்களில் வேலிகளை மிதித்து சாய்த்து உள்ளே சென்ற காட்டு யானைகள் தென்னை, பனை மரங்களை சேதப்படுத்தி நாசம் செய்து விட்டு சென்றுள்ளன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் அம்பை வனச்சரகர் மற்றும் சேரை சப்.கலெக்டரிடம் காட்டு யானைகளின் தொந்திரவால் உண்டாகும் சேதங்களை எடுத்துக்கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : grove ,Kallidaikurichi , Wild elephants
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!