×

'முதல்வரைப் பார்த்து கொரோனாவுக்கே பயம்’ என உலக மகா நடிகர்களைப் போல வாய்கூசாமல் வசனம் பேசும் அமைச்சர்கள் : டிடிவி தினகரன் காட்டம்

மதுரை : மதுரை அருகே தோப்பூரில் 180 ஏக்கரில், ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 2019, ஜனவரியில் பிரதமர் மோடி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜிக்கா) இம்மருத்துவமனைக்கான நிதியை கடனாக வழங்குகிறது. இத்திட்டம் 2022க்குள் முடிக்கப்பட வேண்டும். முதல் கட்ட திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தயாரித்து இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஜிக்காவிடம் சமர்ப்பித்தன. ஆனால் ஆய்வு நடத்தி முடித்தும் திட்டத்திற்கான நிதியை கூட்டுறவு முகமை இதுவரை வழங்கவில்லை. மருத்துவமனை அமையும் தோப்பூர் பகுதியில் தற்போது வளாக சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி மட்டுமே நடந்து வருகிறது. இந்த நிலையில்,  கட்டுமான நிதி கைக்கு வரவில்லை  என்றும் எய்ம்ஸ்க்கான இடத்தையும்  தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என்றும் ஆர்டிஐயில் மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்து இரண்டு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், மருத்துவமனை அமைப்பதற்கான  இடத்தை பழனிசாமி அரசு முறைப்படி மத்திய அரசிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவமனை அமைக்கும் பணிகளுக்கான டெண்டரில் மாநில அரசு முடிவெடுக்க விதிகள் அனுமதிக்காது என்பதால், டெண்டர்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் ஆட்சியாளர்கள் இதில் அக்கறை காட்டவில்லையோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்திருக்கிறது. ‘பதவியைவிட கொடுத்த வாக்குறுதியே முக்கியம்’, ‘முதலமைச்சரைப் பார்த்து கொரோனாவுக்கே பயம்’ என்றெல்லாம் உலக மகா நடிகர்களைப் போல வாய்கூசாமல் வசனம் பேசும் அமைச்சர்கள் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும் கூட நம்பிக்கைத்துரோகம் செய்ய துணிவது சரியா?  இதன்பிறகாவது, மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Ministers ,world ,actors ,Corona ,DTV Dinakaran , World's Greatest Actors, Ministers, DTV Dhinakaran, Show
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...